செவ்வாய், 10 ஜனவரி, 2012

தண்ணீர் தேசத்தில் ரசித்த துளிகள்

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை. 

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது
  
முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?
  
கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது
  
பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.
  
இந்தப் பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் என்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.
  
எப்போதும் வெப்பம்.
எதிலும்
ஆவேசம். எதையும்
அறிவாகவே
பார்க்கும் அவசரம். இது
தகாது
நீங்கள் புன்னகையைக்
கழற்றிவிட்டுப் போர்வாள்
தரித்திருக்கிறீர்கள்.
போர்தான். அடுத்த
நூற்றாண்டு
யுத்தம்தான். மிருகவாழ்க்கை
மனிதனுக்குத் திரும்பும். வலிமை
உள்ளது மட்டுமே தப்பிக்கும்.
அன்பு - அறம் - எல்லாம்
அன்றில் - அன்னம் பட்டியலில்
காணாமல்போகும்.
அடுத்த நூற்றாண்டில் எவனும்
சைவனாய் இருக்கமாட்டான்.
நரமாமிசம் தின்பான்.
டீக்கடைகளின் மனிதரத்தம்
விற்கும்.

இந்த நூற்றாண்டு மனமும்
உடம்பும்
அடுத்த நூற்றாண்டுக்காகாது.

நகரவாழ்க்கை என்னும் இந்தத்
தார்ப்பாலைவனம் கடக்க
தோல் - தோள் இரண்டும்
தடித்திருக்கவேண்டும்.

இனி வருவது போராளிகளின்
காலம். மனிதர்களோடு
மனிதர்களும் -
எந்திரங்களோடு
எந்திரங்களும்,
தொடர்ந்து யுத்தம்
புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.

அந்த யுத்தத்திற்குத் தங்களைத்
தயாரித்துக் கொண்டவர்கள்
மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த
நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக்
கொள்ளலாம். முடியாதவர்கள்
இந்த நூற்றாண்டின்
இறுதியிலேயே
இறங்கிக் கொள்ளலாம்.

வாழ்க்கையின்மீது
நீங்கள்மட்டுமே
நிறைவேற்றிக்கொள்ளும்
அவநம்பிக்கைத் தீர்மானம்
இது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து
உயர்வது உங்கள்
ஒருகரமாய்த்தானிருக்கும்.
இன்னொரு கரம் உயர்ந்தால்
அது உங்கள் இடக்கரமாய்
இருக்கலாம்.

அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும்
அழுகிவிடவில்லை. அழுகப்
போவதுமில்லை.

வேட்டையாடுகிற
வேட்டையாடப்
படுகிற இரண்டு இனங்களும்
உயிர்கள் தோனறிய
காலந்தொட்டு
உலவிக்
கொண்டுதானிருக்கின்றன.
ஆனால், சிங்கம்
அழிந்துவிடவுமில்லை. முயல்
முடிந்துவிடவுமில்லை.

வலைகளின் எண்ணிக்கை
அதிகமானதற்காய் மீன்களின்
எண்ணிக்கை
குறைந்துவிடவில்லை.


வசந்தம்-கோடை-மழை-குளிர்-
வெயில்-புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்துபோயிருக்கும்.

கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.
அனுபவங்களின்பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.



கடல் இல்லையென்றால்
வானுக்கு நிறமில்லை. நீ
இல்லையென்றால் என்
வாழ்க்கைக்கு நிறமில்லை.



நீ கடல். நான் பூமி என்பது
வெறும் உவமை
அல்ல. உண்மை.



உணர்வுகளின் தேவை காதல்.
உணர்ச்சிகளின் தேவை காமம்.
உலகத்தின் தேவை உழைப்பு. 



பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்த பூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.



உள்ளே எதையும் ஒளிக்காதே.
துணிந்துவிடு. துப்பிவிடு.

ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.
வீரம் வரும்.
ரகசியம் துப்பு. தூக்கம்
வரும்.



இயற்கை தாலாட்டினால்
இந்தக் கடல் இவர்களுக்குத்
தொட்டில்.
இயற்கை தள்ளிவிட்டால் இந்தக்
கடல் - கல்லறை.

கரை மீண்டால் இவர்கள்
மீன்தின்னலாம். கரை
மீளாவிட்டால் இவர்களை
மீன்தின்னும்.

வேட்டையாடு. அல்லது
ஆடப்படு.- இதுதான்
இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட
அழியாத வாசகம்.



வாழ்வைக் கற்பனை செய்.
சாவைக் கற்பனை செய்யாதே...

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம்
வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.

உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில்
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே...

இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.

இன்பத்தை இரண்டாய்ப் பார்.
துன்பத்தைப் பாதியாய்ப் பார்...



நிலாவின் வட்டமுகத்தை - வளர்ந்த கொடியின்
வளைவு நெளிவுகளை - புல்லின் மெல்லிய
அதிர்வுகளை - நாணலின் மென்மையை -
பூக்களின் மலர்ச்சியை - மானின் பார்வையை-
உதயசூரியனின் உற்சாகத்தை - மேகத்தின்
கண்ணீரை - காற்றின் அசைவை - முயலின்
அச்சத்தை - மயிலின் கர்வத்தை - தேனின்
இனிமையை - புலியின் கொடுரத்தை -
நெருப்பின் வெம்மையை - பனியின்
தன்மையை - குயிலின் கூவலை - கொக்கின்
வஞ்சகத்தை - கிளியின் இதயத்தை -
சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.



தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன்
காதில் வேதாந்தம் ஓதக்கூடாது
என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல.
விஞ்ஞானமும் ஓதக்கூடாது...

செவ்வாய், 20 டிசம்பர், 2011

நடைமுறை வழக்கில் உள்ள இணைச்சொற்கள்

அடுக்கடுக்கான  பல சொற்களை பேசுவதுண்டு அந்த சொற்களை இரட்டைகிளவி போலவும் எதுகை மோனை போலவும் இருக்கும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியும் சில சொற்களுக்கு விளக்கம் தெரியாது இருந்தாலும் அச்சொற்களை சரியான தருணங்களில் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் (உதாரணமாக: அடிதடி,அக்கம் பக்கம் ,நேரங்காலம் ) இச்சொற்களை பற்றி ஆசிரியர் இளங்குமாரன் சொல் அகராதியில குறிப்பிட்டு இருப்பார் அந்த சொற்களை பற்றி இதோ உங்கள் பார்வைக்கு...

நெளிவு சுழிவு : ஒருவரிடம் உள்ளது உள்ளது படி பேசிகிட்டு இருக்கும் போது மற்றவர் கடிந்து கொள்வர் நெளிவு சுழிவு தெரியாம பேசறீயேன்னு,நெளிவு-ஒருவரது செயல் அறிந்தோ அல்லது சூழ்நிலை அறிந்தோ அதற்கேற்றார் போல் நடந்து கொள்ளுதல் சுழிவு-ஒருவரது செயல் அறிந்து அதற்க்கு தக்க சூழ்ச்சி வழியில் நடந்து கொள்ளுதல், அத கூட இப்ப போட்டு வாங்கறதுன்னு சொல்றாங்கல்ல அது போல

கணக்கு வழக்கு : அதுக்குன்னு ஒரு கணக்கு வழக்கு வேண்டாமா, அவனுக்கும்  எனக்கும் இனி எந்த கணக்கு வழக்கும் கிடையாது இப்டி ஏதாவது ஒரு சண்டையிலையோ ,இல்ல வேற எதாவது ஒரு சூழ்நிலையிலையோ நாம சொல்லியிருப்போம் இல்ல கேட்டிருப்போம்,கணக்கு-கணக்கிட்டு வைத்து கொள்ளுதல் வழக்கு-காலங்காலமாக(அ)வழக்கமாக செய்தல்

ஒளிவு மறைவு : ஒளிவு-சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு மற்றதை மறைத்து விடுவது மறைவு-எதுவுமே சொல்லாமல் எல்லாவற்றையும் மறைப்பது

ஏடா கூடம் :ஏடா-ஏடம் , அதாவது செருக்கு,கர்வம்,தடித்தனம் அதாவது கண்ணியமற்றவைகள் கூடம்-வஞ்சகம்,மறைப்பு அதாவது முறையில்லாமல்   போவது

உண்ணாம திண்ணாம : உண்ணாம-பேருணவு அதாவது சாப்பாடு திண்ணாம-சிற்றுணவு அதாவது டீ காபி முறுக்கு கடலை

அரசல் புரசல் : அரசல்-தன் காதால் நேரடியாக கேட்பது புரசல்-இன்னொருவர் அவர்கள் காதால் கேட்டு அதை நம் காதால் கேட்பது

வெட்டவெளி : வெட்டை-மேடான பகுதி வெளி-அகன்று விரிந்து பரந்து திறந்த வெளி பகுதி

வத்தலும் தொத்தலும் : வத்தல்-வறுமையில் வாடியிருத்தல் மெலிந்திருத்தல் தொத்தல்-நோயால் வாடியிருத்தல் மெலிந்திருத்தல்

பிக்கல் பிடுங்கல் : பிக்கல்-தனக்கான சொத்தை,பொருளை,பணத்தை உரிமையுள்ளவர்கள் பிரித்தல்(அ)கேட்டல் பிடுங்கல்-உரிமையுள்ளவரும் இல்லாதவரும்(அ) தனக்கான பங்குக்கும் மேலாக பங்கை(சொத்து,பொருள்,பணம்)பிரித்தல்

பழக்க வழக்கம் : பழக்கம்-ஒருவர் பல காலமாக செய்து வருவது வழக்கம்-பலரும் பலகாலமாக செய்து வருவது அதாவது மரபு வழி வழியாக வருவது

புள்ளை குட்டி : புள்ளை-ஆண் பிள்ளை குட்டி-பெண் பிள்ளை

பேர்புகழ் : பேர்-வாழும் காலத்தில் கிடைக்கும் பெருமைகள் புகழ்-நாம் இல்லாத போதும், இல்லாத காலத்திலும் கிடைக்கும் பெருமைகள்

நோய் நொடி : நோய்-உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிற பிணி நோய் நொடி-வறுமை

திக்குமுக்கு : திக்கு-வார்த்தை பேசமுடியாத நிலை முக்கு-மூச்சி வெளியிட முடியாத நிலை, தான் செய்த தவறை மற்றவர் அறிந்து விட்ட நிலையில் அச்சத்தில் உறைந்து போயிருத்தல்

சொல்லாம கொள்ளாம : சொல்லாமல்-வந்த விஷியத்தையோ(அ)போகின்ற விஷியத்தையோ சொல்லாதிருத்தல் கொள்ளாமல்-எதையும் பெறாமல் அதாவது வாங்காமல் செல்லுதல்

சீரும் சிறப்பும் : சீர்-மனமுவந்து பொருட்களை தருதல் சிறப்பு-மனமுவந்து பாராட்டுதல் புகழ்தல்

சின்னாபின்னம் : சின்னா(சின்னம்)-தனிமை ப்டுத்தல், தனித்தல்,பிரித்தல் பின்னம்-சிதைவுபடுத்துதல்,சேதபடுத்துதல்

சாக்கு போக்கு : சாக்கு-தான் செய்த தவறை பிறர் மீதோ ஏனைய நிகழ்வுகளின் மீதோ சொல்லி தப்புதல் போக்கு-செய்த தவறை மறைக்க திசை திருப்புதல்

சண்டை சச்சரவு: சண்டை-ஒருவரையொருவர் தாக்கி கொள்தல் அதாவது கைகலப்பு சச்சரவு-வாயால் திட்டிக் கொள்தல் வாய்சண்டை

சட்டதிட்டம் : சட்டம்-அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை திட்டம்-காலங்காலமாக சமுதாயத்தால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை

கூடமாட : கூட-ஒருவருக்கு துணையாக(அ)உதவியாக இருத்தல் மாட-ஒருவருக்கு பேச்சு துணையாக இருத்தல்

ஏழை பாழை : ஏழை-வறுமையில் உள்ளவர் பாழை-ஒன்றுமில்லாதவர் வெறுமையாளி

ஆஞ்சி ஓஞ்சி : ஆஞ்சி(ஆய்ந்து)-ஓர்செயலை ஆராய்தல் ஓஞ்சி(ஓய்ந்து)-எதுவும் செய்ய முடியாமல் போதல்(அ)சோர்ந்து போதல்

அரைகுறை :அரை-சரிபாதி அளவு குறை-அரையிலும் குறைவானது

அருமைபெருமை : அருமை-தன் செயலால் உயர் தன்மை அடைதல் பெருமை-கல்வி,பதவி,செல்வம் ஆகியவற்றால் வரும் செல்வாக்கு

அக்கம் பக்கம் : அக்கம்-தான்,தான் இருக்கும் இடம்,வீடு பக்கம்-அருகில் இருப்பவர்(அ)அதற்கடுத்து இருப்பவர் இருக்கும் இடம்,வீடு






உதவிய பக்கங்கள்---- தமிழ் அகராதி, இணைச்சொல் அகராதி , விக்கிபீடியா

*****பிரகாஷ்சோனா*****

வெள்ளி, 25 நவம்பர், 2011

ருத்ராட்சமும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சம் , ருத்ராட்சத்தை பற்றி பல பதிவுகள் படித்திருப்பீர்கள் ,ருத்ராட்சத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்றவுடன் இது ஆன்மீக பதிவு என்று நினைத்து விட வேண்டாம் ,சரி நாம் விடயத்துக்கு வருவோம்.
ருத்ராட்சம் சிவபக்தர்கள் அணிய கூடியது, சைவர்களின் அடையாள சின்னம், ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது ,சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணிய வேண்டும், இதை அணிந்தால் பல விதிகளை கையாள வேண்டும் , என்று பலவாக சொல்லி கேட்டிருப்பீர்கள் .சரி அது அத்தோடு இருக்கட்டும் .பதிவை படித்துவிட்டு நீங்கள் அணிந்து கொள்ளலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கு, ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது ,அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
 எலீயோகார்பஸ் சொராட்டஸ் (Elaeocarpus serratus)
எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ் (Elaeocarpus tuberculatus)
எலீயோகார்பஸ் கானிட்ரஸ்(Elaeocarpus ganitrus) ஆகியனவாகும்.

                                                               ருத்ராட்ச மரம்
இவை தென் கிழக்கு ஆசிய பகுதிகளான இந்தோனேசியா,ஜாவா,சுமத்ரா,போர்னியோ வடக்கே இந்திய இமயமலை சாரல், நேபாளம், வங்கதேசம் அஸ்ஸாம்,ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகளில் விளைகின்றன. இவை 100அடி உயரம் வரை வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடியது,  25லிருந்து 36டிகிரி வரை தட்பவெப்பனிலையில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே வளரும் . இவை அவ்வளவு எளிதாக முளைக்காது ,இதனை பயிர் செய்தால் 1முதல் 2ஆண்டுகள் வரை முளைப்பே வெளியில் தெரியாது, இதன் இலை 

                                                             ருத்ராட்சப்பழம்  
                                                     
மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும்.
இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே  ருத்ராட்சம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து  ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர் அவை

                        *சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
                        *காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
                       *அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive)  ஆகியன
ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகிய மாற்றம் பெறுகின்றனர். மேலும்  ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர்.மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.அன்று முதல் வெளிநாட்டவர் முதல் உள்ளூர்வாசிகள் வரை அணிய தொடங்கினர் . ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று சொல்வர், ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும் ,ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுவர் .இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு, ருத்ராட்ச மணிகள் மூன்று நிறங்களில் உண்டு .செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகும்.ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ஏழுமுக ருத்ராட்சையின் உள்தோற்றம்
ஒன்பது முக ருத்ராட்சையின் உள்தோற்றம்
              



ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்

இரண்டுமுகம்
   
மூன்றுமுகம்
நான்கு முகம்
ஐந்து முகம்
ஆறுமுகம்
ஏழு முகம்
எட்டு முகம்
ஒன்பது முகம்
பத்து முகம்
பதிநான்கு முகம்

பத்தொன்பது முகம்

த்ரிஜீடி
பதினோரு முகம்
பனிரெண்டு முகம்
பதிமூன்று முகம்
பழத்தினுள் ருத்ராட்ச கொட்டை




இப்போது சொல்லுங்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த ருத்ராட்ச மணிகளை அணியலாமா வேண்டாமா என்று , ருத்ராட்சம் அணியுங்கள் .நம்மிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறையட்டும்.

கொசுரு: 17முகம் ருத்ராட்சம்-99ஆயிரமாம்
                  15முகம்--37ஆயிரம்
                  14முகம்--19ஆயிரம்
                  19முகம்--1லட்சத்து 99ஆயிரம்
ஸ்ஸுப்பா இப்பவே கண்ணகட்டுதே நீங்க கவலை படாதீங்க நம்ம 5முகம் 6முகம் 4முகம் இப்டி வாங்கி போட்டுக்கலாம் அதெல்லாம் விலை கம்மி தானாம் 10ரூ முதல் 100ரூ வரை தாம்.ஒருமுகம் கிடைப்பது ரொம்ப அரிதாம்


நன்றி விக்கிபீடியா,ருத்ராட்சம், சிவனின் கண்கள்

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா