வியாழன், 22 மார்ச், 2012

நாட்டுபுற கிராமிய பாடல்கள்


இந்த பதிவை நான் எழுத பெருமை பட்டாலும் சிறிய வருத்தமும் உண்டு ஏனென்றால் இக்கலை அழியக்கூடிய தொய்வு நிலையில் இருப்பதனால் அட என்ன கலைன்னு கேக்குறீங்களா நம்ம நாட்டு புற இசை கலைகள் தாங்க...அட ஆமாங்க முன்பெல்லாம் கிராமங்கள்ல எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவாங்க குழந்தை பிறக்கும் முதல் இறக்கும் வரை....

குழந்தைக்கு தாலாட்டு பாட்டு , சும்மா சுற்றி திரியிற இளங்காளைகளுக்கும் கன்னியருக்குமான காதல் பாட்டு., விளையாடும் போது பாட்டு , வேலை செய்யும் போது சோர்வு தெரியாமலிருக்க நடவு பாட்டு ,ஏற்றம் இறைக்கும் போது பாட்டு , வழிபாட்டு பாட்டு ,கதை பாட்டு, திருமண சடங்கு பாட்டு ,நின்னா பாட்டு, உக்காந்தா பாட்டு, கும்மி பாட்டு ,குலவ பாட்டு இப்டி நம்ம தமிழர் மரபுல இசையோடும் இயற்கையோடும் ஒன்றியே வாழ்ந்திருந்திருக்காங்க நம்ம முப்பாட்டன்மார்கள் .

ஆனால் நாம இப்ப நமக்கு புரியாத மேற்கத்திய இசையோட கலந்துட்டோம் சரி அதெல்லாம் இப்ப நமக்கெதுக்கு வந்த விடயத்தை சொல்லிடுறேன்.

நாட்டுபுற பாடல்களை பற்றி எனக்கு தெரிந்த , கேட்ட ,படித்த சில பாடல்களை தான் குறிப்பிடலாம்னு இருக்கேன். சரி இப்ப முதல்ல குழந்தைங்க பாட்டுல இருந்து ஆரம்பிப்போம் குழந்தைக்கான தாலாட்டு பாட்டுல மாமன்மார்களுக்கு முக்கியத்துவம் குடுத்து பாடபட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியல ஒரு வேளை குழந்தைக்கு தாய்மாமன் முக்கியத்துவம் கருதி கூட இருக்கலாம் உதாரணத்துக்கு

”பால் குடிக்க கிண்ணி
முகம் பார்க்க கண்ணாடி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ”
                                                     
அதேபோல குழந்தை பயன்படுத்தும் பொருட்களை வர்ணனை படுத்தியும் அவன் பிறப்பின் பெருமைகளை பற்றியும் பாடபட்டிருக்கும். மேலும் குழந்தை வளரும் தருணங்களில்

”தப்பளாங் குட்டி தவழ்ந்து வர
தரை எத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டியானை குதித்து வர
குடில் எத்தனை தவம் செய்ததோ”

இப்படி குழந்தை பிறந்தது முதல் அடியெடுத்து நடப்பது விளையாடுவது வரை  குழந்தைக்கான நாட்டுபுற பாடல்கள்..உண்டு. சிறு குழந்தைக்கான விளையாட்டு பாடல்
ஆலையிலே சோலையிலே;ஆலங்காடி சந்தையிலே
கிட்டிபுள்ளும் பம்பரமும் கிறிக்கியடிக்க
பாலாறு பாலாறு பாலாறு - னு

சொல்லிகிட்டே கில்லியடிப்பாங்க அதே போல இளைஞர்களும்

நாநதா வீரனடா; நல்லமுத்து பேரனடா
வெள்ளிசிலம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க சிலம்பெடுத்து தாலிகட்ட வாரேன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு - னு

கபடி ஆடுவாங்க சரி நம்ம இளைஞர்கள் கபடியும், கிட்டி மட்டுமா விளையாடுவாங்க அட ஆமாங்க காதல் விளையாட்டுலையும் கை தேர்ந்தவங்க நம்ம இளைஞர்கள், அவரவர் முறை பெண்களை கேலி செய்து பாடும் பாடல்கள் அவளின் கடைகண் பார்வைக்காக ஏங்குவது போல் பாடல்கள் என நம் நாட்டுபுற பாடல்களில் உண்டு. அதிலும் பெண்கள் தான் கிண்டல் செய்வதில் கெட்டிகாரங்க அட ஆமாங்க இத கொஞ்சம் கேளுங்க

மாமா மணியக்காரா என்னை கட்டிக்க
மஞ்சவடை சுட்டுப்போடுறேன் என்னை கட்டிக்க
கூளூரு போறமட்டும் குத்து பட்டுக்க
கொழுக்கட்ட சுட்டு போடுறேன் புட்டு போட்டுக்க - இப்டி

ஒரு பெண் ஒரு ஆண்மனை கேலிசெய்யறபாட்டு அதே போல அத்தை மகனை கேலி செய்யுற மாதிரி பாட்டுகளும் உண்டு ...இதோ...

நெல்லு வெளஞ்சத பாருங்கடி யம்மா
நெல்லு சாஞ்சத பாருங்கடி
நேத்து பொறந்த அத்த மவனுக்கு
மீசை மொளச்சத பாருங்கடி

அதேபோல திருமண நிச்சயித்த பெண் தனக்கான ஆண்மகனை கேலிசெய்யும் பாடலும் இதோ...
என்னை ஏண்டா பாக்குற நீ சும்மா சும்மா
சுண்ணாம்புக்கு பாக்குறேண்டி உன்னை உன்னை
உனக்குதாண்டா பாக்குறாங்க என்னை என்னை
அதுக்குதாண்டி பாக்குறேன் உன்னை உன்னை

அதே போல கோவலன் போல சுற்றி திரியுற கணவனை பார்த்து மனைவி பாடுற மாதிரி ஒரு பாட்டு
சாமத்தில பூத்த பூவு மச்சா
சாமந்திப்பூ நானிருக்க
சாறிப்போன பூவுக்கு தான் மச்சா
சந்து சந்தா நீ சுத்தலாமா
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல்களா பாடி இசையோடவே ஒன்றி நாம் வாழ்ந்திருக்கோம், அதே போல பாடல்களை பாட எழுத்து வரிகளை கையாண்ட முறைகளும் அருமையா இருக்கும். சில பெருசுகளின் பாடல்களை கேட்க தவமாய் காத்திருந்திருப்போம், ஏன் நம்ம கம்பன் கூட ஏற்றம் இறைக்கும் விவசாயின் பாடலுக்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்ததாக கதைகளும் உண்டு இதோ அந்த பாடல்
மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே

மரித்தோருக்கான பாடல் :
ஆரங்கி ரவிக்கையும் ஆனைமுக தங்க காப்பும்
அதட்டி கழட்டையில என் அங்கம் நடுங்குதே
பூவாலழகியம்மா நான் புண்ணியரோட மனைவியம்மா
புண்ணியரத் தோத்தேனே பூவிழந்து போனேனே
மஞ்சளழகியம்மா நான் மன்னனோட தேவியம்மா
மன்னவரத் தோத்தேனே மஞ்சளிழந்து போனேனே
பொன்னு திருவளைய நான் பொறக்கையில போட்டாளையா
புண்ணியனா வாசலிலே பொடி பொடியாவுதே

இப்படி நிறைய பாடல்கள் உண்டு என்னால் எல்லா பாடல்களையும் பதிவிட முடியல மீண்டும் சந்தர்பம் கிடைக்கும் போது பகிர்கிறேன் முடிவா ஒரு சின்ன கும்மி பாட்டோட பதிவை முடித்து கொள்கிறேன்
  
வாங்கடி வாங்கடி தோழி பெண்டுகளா-வள்ளி
மாமயில் பாட்டை படியுங்கடி
கானலில் இருந்த மாமயிலே-கந்தன்
கண்ட கதைய படியுங்கடி
 குறவர் குடிசை நுழைந்தானடி-அந்த 
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி-அவன்
தோற்றத்தை பாடி அடியுங்கடி
உங்களுக்கும் ஏதாவது கிராமிய பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடுங்க மீண்டும் சந்திப்போம்

உதவிய பக்கங்கள் : நாட்டுபுற இயல் , விக்கி , கிராமியம்

எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
பிரகாஷ் சோனா 

8 கருத்துகள்:

  1. மிக்க அருமை. இது போல் இன்னும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
    செல்லப்பா

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த அழகான எழுத்து நடைகளை மாலையாக கோர்த்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே சோனு....வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. தங்களது முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். என் தங்கை மகள் பிறந்ததில் இருந்து எங்க வீட்டில் ஒரே பாட்டு மழை தான்... :) எங்க அம்மாவும் அப்பாவும் ஒவ்வொன்னா இப்போ தான் தூசி தட்ராங்க.... அப்படி தட்டியதில் பறந்த சில...

    ஆராரோ ஆரிராரோ
    என்ற (என்) பொண்ணே நீ ஆராரோ
    ஆராரோ ஆரிராரோ
    என்ற கண்ணே நீ ஆராரோ
    என்ற ஆறிக்கழுத கண்ணோ
    என்ற ஆறிக்கண்ணே ஆராரோ (௨)
    என்ற வலம்புரிச் சங்கோ நீ
    என்னம்மா வலம்புரிச் சங்கோ நீ
    என்னம்மா நீ சிந்தும் புன்னக
    என் தோப்பு மாதுளம் முத்தோ அம்மா!
    ஒன் (உன்) சிங்காரப் புன்னக
    கொடி முல்லை அரும்போ அம்மா! (என்ற ஆறிக்.....)

    இப்படி நிறைய வார்த்தைகள் நாமே போட்டு பாட வேண்டியது தாங்க.

    அடுத்து

    தங்கமே தாராவே
    தடத்துல வழியில போகதே
    தட்டான் கண்டா தங்கம்பான்
    தராசில் இட்டு நிறுத்தும்பான்
    பொன்ணும்பான் மணியும்பான்
    பொட்டில வச்சு பூட்டும்பான் - அதனால (தங்கமே தாராவே)

    அடுத்து எங்க பாப்பா இப்போ சாதம் கைல நல்ல பிசைய ஆரம்பிச்சுட்டாங்க...
    இப்போல்லாம் இந்த பாட்டு தான்ங்க....

    மம்மு பெசையும்மா (பிசையும்மா) மம்மு பெசை
    தித்திக்க தித்திக்க மம்மு பெசை
    தயிறு ஊத்தி மம்மு பெசை
    பாலு ஊத்தி மம்மு பெசை
    தேனு ஊத்தி மம்மு பெசை
    பருப்பு போட்டு மம்மு பெசை..... (மம்மு... )
    ----------------------
    தாப்பூ தாமரப்பூ தாத்தா தந்த தாழம்பூ
    மாப்பூ மல்லிகப்பூ மாமா தந்த மகிழம்பூ
    சேப்பூ செவ்வந்திப்பூ சித்தி தந்த செம்பருத்திப்பூ
    ஆப்பூ அரளிப்பூ அக்கா தந்‌தாளாம் அல்லிப்பூ.....

    இப்படி பல பூக்களையும் உறவுகளையும் வைத்துப் பாடலாங்க. விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணன் கிராமிய பாடல்களில் இருந்து நான் எடுத்துக் கொண்டவை இவை.

    எங்க பாப்பா நல்ல மாடில நின்னு குதிக்க ஆரம்பிச்ச போது

    சங்குசக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்
    சன்சனக்க சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்

    சாஞ்சாடம்மா, கை வீசம்மா, காக்கா மை கொண்டா... இதெல்லாமும் நிச்சயம் உண்டுங்க...

    இது ஒரு விடுகதைங்க. முடிந்தால் விடுவிக்கவும்.... :) கொஞ்சம் சுலபம் தாங்க..

    அங்கமுத்து வாசலுல
    தங்கமுத்து காயுது
    அதை எடுத்து வாயில போட்டா
    திக்கு மூக்கு ஆடுது....

    -------------------------------------

    கும்மி பாடல்னு நினைக்கிறேன் ...

    ஒரு மல (மலை) ஏறி கல்லுருட்டித் தள்ளி
    முத்து குளத்துல பால் காச்சி
    காச்சின பாலும் கசக்குது பசப்பி
    கைவிட்ட தேனும் புளிக்குது பார்
    வெள்ளரிப்பிஞ்சும் கசக்குது பசப்பி
    வேப்பங்காயும் இனிக்குது பார்
    ரெண்டு மல ஏறி.......

    இப்படியே எவ்ளோ மலை வேணாலும் ஏறலாங்க....

    ஒரு பணத்துக்கு துண்டெடுத்து
    நல்ல ஒன்னா நெம்பரு சாயங்கட்டி
    சாயக்கடக்காரன் கோவக்காரன் நல்லா
    சாஞ்சடிங்கடி பொம்பளங்கோ
    ரெண்டு பணத்துக்கு....

    இப்படியே எவ்ளோ பணத்துக்கு வேணாலும் கும்மி அடிக்கலாங்க.

    ரொம்பவே தாமதமாக இடும் பதிவு என்றாலும், யாருக்காவது நிச்சயம் ருசிக்கும் என்ற நம்பிக்கையில்

    - கிராமிய மகள்





    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல்கள நன்றி

    பதிலளிநீக்கு