சனி, 30 நவம்பர், 2013

சுட்ட கதை (பகுதி நான் மிகுதி புகழேந்தி)

என் சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தமிழை நுகர்ந்து செல்லட்டும், எனது ஒவ்வொரு நா அசைவும் காற்றோடு இசைந்து கால் அரை ஒரு மாத்திரையென தமிழை மட்டுமே அசை போடட்டும், இவைகளை கேட்டு என் செவிகள் இன்புறட்டும். இதோ தமிழுக்கான என் கர்ஜனை எட்டுத் திக்கும் பரவி வளிமண்டலத்தையே கிழித்தெரியட்டும், இனியொரு சீவன் உதயமாகின் அஃது தமிழையே நுகர்ந்து செல்லட்டும், தமிழை மட்டுமே நுகர்ந்து செல்லட்டும். அது அண்டவெளியின் எக்கோளின் உயிரினமாயினும் சரி தமிழாலே இன்புறட்டும், இஃது தமிழின் மீதான செருக்கோ ஐயமோ இல்லை, யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமே, 
சரி… கேளீர்.,! யாம் பெற்ற இன்பம் கேளீர், 
சுவைபடு தமிழைக் கண்டு, நிகண்டுகள் சில தந்த வீரமுனியின் தேம்பாவணி சுவைத்ததுண்டோ, தெள்ளமுதாம் தேனூர் முக்கனிச் சுவையாம் கலம்பகம் படித்ததுண்டோ, நந்திக்கலம்பக பாட்டுடைத் தலைவனை அறிந்ததுண்டோ, வனப்பு மிகு தமிழைக் கேட்டு மகிழ வர்மன் அருட்சோதியான கதையும் கேட்டதுண்டோ, 
ம்ம்ம் இன்னும் கேளீர் 
ஈரடி கருப்பொருளாம் வள்ளுவனின் மறை பொருளாம் உலகறிய மொழிபெயர்த்த கதையும் கேட்டதுண்டோ, சிவமும் அன்பும் ஒன்றாகும் அஃதின் உதயம் தென்னாடாகும்.  தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றியின் பொருளுணர்ந்ததுண்டோ

நிற்க.

தமிழ் வாள் உயர்த்தி சமூக அவலங்களை சவலை பிள்ளையாக்கிட துடிக்கும் எழுத்தாளன் தான் இவர் அதனாலேயே சர்ச்சைகளும் பல இவரை சுற்றி திரிவதுண்டு

இதோ பிரபல பத்திரிகைக்கு அவரது பிரத்யேக பேட்டி

தமிழை பற்றியும் சமூக அவலங்களை பற்றியும் கார சாரமா பல பத்திரிக்கைகள்ல எழுதியிருக்கீங்க புரட்சி எழுத்தாளன்னும் உங்கள சொல்றாங்க அத நீங்க எப்டி எடுத்துக்குறீங்க

புரட்சி வித்துகள் அண்ணன் பிரபா சே செய்யாத புரட்சியா தாடியும் மீசைக்காரனும் செய்யாத புரட்சியா நான் செய்திருக்க போறேன்

சர்ச்சைக்குரியவர்னு கூட உங்கள சொல்றாங்களே சென்ற வருடம் இணையத்தில் அதிகம் தேடபட்டவரும் நீங்கள் தான் விமர்சனத்துக்குள்ளானவரும் நீங்க தான்

பேச்சு தொணியில் சற்று வீரியத்தோடு
சமூக அவலங்களெலாம் சர்ச்சைக்கு உட்பட்டவையாதானே இருக்கு நான் அவலங்களை நோக்கி ஓடுவதால் சர்ச்சைகளும் என்னை சூழ்ந்து கொள்கிறது அவலங்களை களைவது நிம்மதியை ஏற்படுத்தும் ஒருவகை இன்பம் தானே

ஆடைகளில்லா வெண்ணிலவே உனை ஆரத்தழுவுவதில் எத்தனை இன்பம் என்று நீங்கள் சொன்ன வரிகள் சமூகத்திற்கு பொருந்தும் தானே

ஹஹஹ சர்ச்சையை கிளப்புவதே நீங்கள் தான் போல்..உண்மை தான் அவல ஆடைகளில்லா சமூக வெண்ணிலாவை தழுவுவது இன்பம் தானே

எழுத்தாளர் தமிழ்பித்தனுக்கும் உங்களுக்குமான கருத்து மோதலை பற்றி

எல்லா எழுத்தாளனுக்கும் உள்ள மோதல் போல தான் இதுவும்

நீங்கள் அவரை காளான் கவிஞன்னு சொன்னதால் அவர் உங்களை வயிற்றில் ஈரம் உலர்ந்து விட்டதால் பிதற்றுவதாக சாடுகிறாரே

ஆமாய்யா ஈரத்துணி கட்டிகிட்டு தான் அலையிறேன் என்னய்யா இது தேனை நக்குபவன் கூழ் குடிப்பவனை குறைபட்டு பார்ப்பது , உழைக்கிறோமையா உழைப்பில் பிழைக்கிறோமையா பிறகென்ன எம்மில் கேடு

உங்கள் போராட்டம் சமூக அக்கறை ஆட்சியின் நிலைப்பாடு எல்லாம் சரி, உங்கள் வீரியத்தை குறைத்து விவேகத்தோடு செயல்பட்டால் சமூக விழிப்புணர்வில் நன்மை பயக்குமே….உங்களது கோபம் தான்…..

போராட்ட குணத்திற்கு வீரியம் விவேகம் கோபம் எல்லாம் உண்டு கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்பான் அஞ்சி கேட்டால் கோழை என்பான் பின்பு எப்படி இதை நாங்கள் கையாளுவது சொல்லுங்கள் நீங்களே சொல்லுங்கள்…. குறுக்கு வலிக்க உழைத்த கூட்டம் குடிசைகளை விட்டு உயரவுமில்லை, குறுக்கு வழியில் பிழைத்த கூட்டம் கோடிகளை சேர்க்க்க அயரவும் இல்லை இதில் எங்கே நாங்கள் கோபபடாமல் இருக்க முடியும்

உங்களின் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது அஞ்சாதே..! அஃறினையும் அழிவென்றால் அகத்தை முறைத்து காட்டும் என்ற உங்களது வரிகளையும் நாங்கள் மறக்கவில்லை இளையோருக்கான உங்களின் பாதை அவர்களை நல்வழிபடுத்தட்டும், ம்ம்ம் ஓர் எழுத்தாளனால் எல்லா நிகழ்வையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா..? 

அளவளாவிய உணர்வுகள் அனைத்தையும் எழுத்தில் கொண்டு வருவது சவால் தான்

உங்களின் அந்தரங்கத்தில் நுழைவதாய் எண்ண வேண்டாம் உங்கள் காதல் பற்றி…….அதுவும் நாற்பது வயதில்

நீண்ட சிரிப்பொலிக்கு பின்
காதலுக்கேது வயது வலி மறக்கும் காரணிகளை தேடித் தேடி அலுத்துப் போன மூளை செல்களுக்குள் சில நொடிகளில் ஆக்சிஜனை ஏராளமாய் நுழைக்க செய்தவள் நட்பை காதலுக்கு கடன் கேட்டபோது அன்பை தருகிறேன் என்று சொன்ன அவள் எனக்கு ஒரு தாய் போதுமா ஹஹஹ

காதலை இத்தருணத்தில் கொண்டாடும் நீங்கள் ஓரிரு வரிகள் உங்களின் காதலுக்காக

ம்ம்ம்ம்
உன்னிடத்தில் எனக்கும் என்னிடத்தில் உனக்கும் பேசிக் கொள்ள கோடி வார்த்தை இருந்தும் மெளன மட்டும் பிடித்திருக்கிறது உனக்கும் எனக்கும்
நன்றி வணக்கம்

வண்ணத்தில் புகழ் மிளிர நீலமயமாய் காயம் அமிழ்ந்து கிடக்கிறது. உங்கள் காயத்துகான புகழை நீங்களும் மிளிர செய்யுங்கள்
வணக்கம்

கற்பனை + எழுத்தாடல்
பெருவுடையான்



செவ்வாய், 12 நவம்பர், 2013

சுட்ட கதை (உணர்வால்)

ஏக்கத்துடன் உட்கார்ந்திருக்கும் அகிலின் மூளைக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க நினைவுகள் பல தொலைகிறது சில நினைவுகள் அகிலை எட்டிபிடிக்க முயற்சிக்கிறது.

காலை ஏழு மணியாகியும் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறான் அகிலன்.  முனகலும் அழுகையுமாய் இருந்த அவனது தங்கையை அருகிலிருக்கும் சோபாவில் உட்கார வைத்து விட்டு அம்மா அகிலை எழுப்புகிறாள்.

டேய் அகில்… டேய் எந்திரிடா… டேய்…

என்னம்மா தூக்கத்த டிஸ்ட்ரப் பண்ணிகிட்டு

தங்கச்சிக்கு வயிறு வலிக்கிதாண்டா பிரசவ வலியா இருக்கும்னு நினைக்கிறேன், ’போயி ஆட்டோ கூட்டிட்டு வா’ ஹாஸ்பிட்டலுக்கு போவனும். அகிலும் வேகமாய் எழுந்து தனது உடமைகளை சரிசெய்து கொண்டு வேகமாக ஆட்டோ கூப்பிட கிளம்புகிறான்.

இதற்கிடையில், டாக்டரை பார்க்க போன் மூலம் அப்பாய்ன்மெண்ட் வாங்கி வைத்து விட்டாள் அகிலின் அம்மா,
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததுதான் இன்னும் பலமாய் கதற ஆரம்பித்து விட்டாள் ’கொஞ்சம் பொருத்துக்கம்மா இதோ கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் வந்திடும்’ என்று மகளை தேற்றுகிறாள். ஹாஸ்பிட்டல் வந்ததும் தங்கையை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டே அங்குள்ள ரிசப்சன் லேடியிடம் பிரசவ டாக்டர் எப்போ வருவாங்க என அகில் கேட்கிறான். அதற்கு அந்த லேடி பிரசவ டாக்டர் நாலு பேர் இருக்காங்க நீங்க எந்த டாக்டர பாக்கனும், உடனே அகிலின் அம்மா ஏங்க மஞ்சுளா மேடத்தை பாக்கனுங்க ஏற்கனவே அப்பாயின்மெண்ட் வாங்கியாச்சி,

கொஞ்சம் இருங்கம்மா இதோ போன் பண்றேன்.

.ஏம்மா உங்கள செக்கண்ட் ப்ளோருக்கு வரசொல்றாங்க,          

யாராவது ஒருத்தவங்க இங்க வாங்க
பேஸண்ட்டோட பேரு என்ன
கோமதி
வயசு
23

நர்ஸ்… பேஸண்ட்ட வந்து அழைச்சிட்டு போங்க என்று அந்த லேடி சொல்கிறாள்

இதோ இரண்டாவது மாடி வந்தாச்சி, அகிலின் தங்கையை சோதனை செய்து கொண்டிருக்கிறார் டாக்டர், இன்னும் சரியான பிரசவ வலி வரவில்லையென நர்ஸிடம் ஏதேதோ சொல்லிவிட்டு  அகிலையும் அவரது அம்மாவையும் வெளியே இருக்க சொல்லிச் செல்கிறார்.
மணி ஒன்பதாகிவிட்டது அகிலோ அம்மாவை ஹாஸ்பிட்டலிலே இருக்க சொல்லிட்டு காலை உணவு வாங்க சென்றுவிட்டான்.
அம்மாவோ தனது மருமகனுக்கு போன் பண்ணி விஷியத்தை சொல்கிறாள், மருமகனும் உடனே வருவதாக சொல்லி போனை துண்டிகிறார். அவர் கடலூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் சென்னை வர எப்படியும் மாலை ஐந்தாகிவிடும்,
காலை உணவை வாங்கி வந்த அகில் அம்மாவுடன் உணவருந்தி கொண்டிருக்கையில் நர்ஸ் அழைக்கிறாள்

யாரும்மா கோமதி கூட வந்தவங்க
அகிலும் உடனே போய் நான் தாங்க என்கிறான்
கோமதிக்கு நீங்க என்ன வேணும்
அண்ணங்க     
சரி நீங்க உடனே போயி ரிசப்சன்ல இருபதாயிர ரூபா பணங்கட்டிட்டு வாங்க
இதோ போறேங்க, அம்மா ஏற்கனவே சொல்லிருந்தாள் பிரசவத்துக்கு எப்படியும் 30ஆயிரத்துல இருந்து 40ஆயிரம் ஆகும்னு

இப்போ அகிலுக்கு ஒன்னுமே புரியல, அப்பாவும் ஊருல இல்ல அண்ணனும் ஊருல இல்ல அகிலுக்கோ பணம் புரட்டும் அளவுக்கு வெளி வட்டார அணுபவமோ நண்பர்களோ இல்லை, அம்மாவும் அவனை புரிந்து கொண்டு தனது கழுத்து சங்கிலியை அவுத்து தருகிறாள், அகிலுக்கு இப்பபோது தான் மனம் நிம்மதி ஆகிறது பணமும் புரட்டியாகிவிட்டது ரிசப்சனிலும் பணத்தை கட்டிவிட்டான் அகில்

மணி மாலை நான்காகிவிட்டது டாக்டர் அழைத்ததாக நர்ஸ் அழைக்கிறாள்

நீங்க யாரு
பொண்ணோட அம்மா
சரி,அவங்க கணவர் வரலையா
வந்துகிட்டு இருக்கார் மேடம்
உங்க பொண்ணுக்கு தண்ணிகொடம் உடைஞ்சிடுச்சி பாப்பவும் மோஷன் போயிடுச்சி அதனால க்ரிடிக்கல் கண்டிஷன் ஆப்ரேஷன் தான் பண்ணியாகனும் என்ன சொல்றீங்க

நீங்க என்ன செய்யனுமோ செய்யிங்க மேடம்

சரி நர்ஸ் ஒரு பார்ம் குடுப்பாங்க அதுல அவங்க வீட்டுக்காரர கையெழுத்து போட சொல்லுங்க

நர்ஸ்ஸும் பார்ம்மை எடுத்து வருகிறாள்
எங்கம்மா கோமதியோட ஹஸ்பண்ட்
அவரு இன்னும் வரலிங்க வந்துகிட்டு இருக்கார்
சரி நீங்க கையெழுத்து போடுங்க

அகிலின் தங்கையை தியேட்டருக்குள் அழைத்து செல்கிறார்கள்
மணி மாலை ஐந்தாகிவிட்டது அகிலின் அத்தானும் வந்து விட்டார்.
குழந்தையின் அழுகுரல்

என்ன குழந்தையா இருக்கும் எல்லோருக்கு ஒரே ஆவல் அதற்குள் அகிலின் அத்தான் குழந்தை பிறந்த செய்தியை சொல்ல போனை எடுத்து நம்பர் டயல் செய்து கொண்டிருக்கிறார், அகிலும் வேகமாய் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று சாக்லெட் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுக்க, என்ன குழந்த தம்பினு கேட்கிறாங்க அதே போல அகிலின் அத்தனும் எல்லாரிடமும் போனில் விஷியத்தை சொல்ல அவர்களும் என்ன குழந்தைனு கேக்குறாங்க

இப்போ இருவரும் ஒரே குரலின் நர்ஸ்ஸிடன் என்ன குழந்தைங்க என்று கேட்க, உள்ளே இருந்து ஒரு ஆயாம்மா வந்து மகாலட்சுமி பொறந்துருக்கு கண்ணு மகாலட்சுமி பொறந்திருக்கா நான் தான் இதோ…. இப்போ தான் ட்ரஸ்ஸிங் பண்ணிட்டு வந்தேன் அம்புட்டு அழகா இருக்கு போயி பாரு, அம்மா உள்ள தான் இருக்கு என்று சொல்கிறாள்.

அகிலின் அம்மாவும் வெளியே வருகிறாள், மருமகனை அழைக்கிறாள்.
’ஐயா வாங்க குழந்தைய போயி பாருங்க’ என்று சொல்கிறாள் அகிலும் அவனது அத்தானும் உள்ளே சென்று பார்கிறார்கள். அம்மா குழந்தையை தூக்கி அகிலிடம் தருகிறாள். அகிலும் பயந்தவாறே குழந்தையை தூக்கி ரசித்து விட்டு அத்தானிடம் கொடுத்து விட்டான், அளவில்லா சந்தோசம் அவனுக்கு அம்மாவை பார்த்து கேட்கிறான் எங்கம்மா தங்கச்சி

இன்னும் தியேட்டர்ல இருந்து கூட்டிட்டு வரல தனி பெட்டு ஒதுக்கனதுக்கு அப்பறம் கூட்டிட்டு வருவாங்கடா என்கிறாள்
இப்பொது அகில் எல்லோரிடமும் சந்தோசமாய் சொல்கிறான் நான் மாமாவாகிட்டேன்னு சொன்ன அந்த நாட்களின் நினைவு அகிலின் உணர்ச்சியற்ற ஜடத்தை கொஞ்சம் சோதித்து பார்க்கிறது

சோகசிரிப்பொன்றை உதிர்த்த அவனது உதடுகள் ஏதோ சொல்ல நினைக்க மூன்றரை வருட நினைவுகளை கண்ணீர் அழிக்க நினைக்கிறது. அன்று தங்கையின் பிரசவத்திற்கு ஓடியதை விட இன்று தங்கையின் குழந்தைக்கு வேகமாக ஓடி சோர்ந்து போய் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறான், அன்று அவனுக்கு நண்பர்கள் இல்லை அப்பா அண்ணன் வெளியூர் சென்றிருந்தனர், வெளிவட்டார பழக்க வழக்கம் இல்லை ஆனால் இன்று எல்லாமே இருந்தும் ஓடி ஓடி களைத்து, நண்பன் தோளின் மீதும் தந்தையின் தோள்மீதும் மாறி மாறி சாய்ந்து துவண்டு கிடக்கிறான்

விஷகாய்ச்சலால் பாதித்த அந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தும் காப்பாற்ற முடியாது என்று சொன்னதால் துவண்டுகிடக்கிறான்

தங்கை டாக்டரின் காலை பிடித்து மன்றாடுகிறாள் பலனில்லை பிணகிடங்கிற்கு அழைக்கிறார்கள் நிலைகுலைந்து செல்கிறான் அகில்
அகிலின் தாயோ ஒப்பாரியிடுகிறாள் ஆவேசமாய்

போ போயி உன் கடனை கழிச்சிட்டு வா அன்னைக்கி பிஞ்சு குழந்தையா கையில வாங்குன இன்னைக்கி பொனமா வாங்கிட்டு வா போடா போ என்று கதறுகிறாள்

ஹாஸ்பிட்டலே கொஞ்சம் கலங்கிதான் போயிருந்தது இவர்களின் கதறலை பார்த்து

அகில் அழாமல் இருப்பதை பார்த்து இவன் தான் தைரியசாலி என நினைத்தாரோ என்னமோ வார்டுபாய், உயிர் பிரிந்த குழந்தையை வாங்க அகிலை அழைத்து செல்கிறான்

குழந்தையின் சரீரத்தை ஹாஸ்பிட்டல் வேன்லையே ஏத்தி தானும் ஏறிகொண்டு மற்றவர்களை வாடகை வண்டிடியில் ஏற்றிவிட்டான்
அகிலின் முன் கிடத்தியிருக்கும் செல்லத்தை பார்த்ததும் அழுகை முட்டிகொண்டது

ஒருதடவை அவளது அம்மாவுடன் மார்க்கெட் போகும் போது தொலைந்து போனதை சொல்லி அம்மா அடிச்சிட்டாங்க மாமா என்று சொன்ன விஷியத்தை அன்றைய சூழலில் காமெடியாக பாடிய பாடலை அழுது கொண்டே
பச்ச பாவாடை நிஷா பொண்ணு
மார்க்கெட் போறா நிஷா பொண்ணு
மார்கெட் போன நிஷா பொண்ணு கானா போயிட்டா என ஓவென்று அழுகிறான் அகில்

வாழ்க்கையின் அழகான தருணங்கள் வேகமாய் கடந்து விடுகிறது என்று நண்பர் கவிக்கோ. புகழேந்தி சொன்ன வரிகள் அவன் நினைவிற்கு வருகிறது

அவள் உலகை விட்டும் அகலவில்லை அகிலின் மனதை விட்டும் அகலவில்லை இன்றும் தனக்கு தெரிந்தவர்கள் மரணத்தோடு போராடினால் அகில் இவளை உருகி நினைத்தாலே போதும் இவளின் மூச்சு காற்று அவர்களின் மரணத்தை விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு இதோ அவளின் நான்காவது பிறந்த நாளை கொண்டாட தயாராகிவிட்டான்

எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
*****பெருவுடையான்*****

வெள்ளி, 7 ஜூன், 2013

தமிழும் தமிழர் வாழ்வும்

தமிழுக்கு அமுதென்று பேர் : அந்ததமிழ்.... இன்பதமிழ்.... எங்கள் உயிருக்கு நேர்

தரணிக்கு முதல் மொழி தமிழ்... அவள் தொடர்ந்து வந்த மொழிகளுகெலாம் தாய்

தமிழரின் பண்பாடு தமிழ்..... அது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுரைக்கும்

தமிழரின் கல்வி தமிழ்.....அது கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றார் தொழா அர் எனின் என்றுரைக்கும்

தமிழரின் சமூகம் தமிழ்......... அது எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்றுரைக்கும்

தமிழரின் நாகரீகம் தமிழ் ........அது பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நணி நாகரீகர் என்றுரைக்கும்

தமிழரின் நாடு தமிழ் ....அது வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் என்றுரைக்கும்

தமிழரின் உறவு தமிழ் அது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுரைக்கும்

தமிழரின் வேதம் தமிழ் அது தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றுரைக்கும்

தமிழரின் வேகம் தமிழ்....... அது வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க என்றுரைக்கும்

தமிழரின் விவேகம் தமிழ்...... அது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு என்றுரைக்கும்

தமிழரின் வாழ்வியல் தமிழ்...... அது மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும், எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை(வு) இலை என்றுரைக்கும்

தமிழரின் வரலாறு தமிழ்...... அது கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்றுரைக்கும்

தமிழரின் வீரம் தமிழ்...... அது நாமர்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்றுரைக்கும்

தமிழரின் காதல் தமிழ்...... அது கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய், முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்றுரைக்கும்

தமிழரின் ஆழம் தமிழ்...... அது கங்கைபோல் காவிரிபோல் கருத்துகள், ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் என்றுரைக்கும்

தமிழரின் அழகு தமிழ்..... அது நோக்கு புவனது நோக்கல் தன்மைத்து என்றுரைக்கும்

தமிழரின் அறம் தமிழ்..... அது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்றுரைக்கும்

தமிழரின் ஈகை தமிழ்..... அது அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கியொளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் என்றுரைக்கும்

ஆக்க தொகுப்பு
__ தம்பிரான்தோழர் கபிலனார் ___

இது போன்று தமிழினை ஆழப்பதியம் போட்டு தொந்தமிழான செந்தமிழை..நற்றமிழாய் பேணி காத்து பைந்தமிழோடு தீந்தமிழாய் நம்மில் பகிர்வோரை எங்ஙனம் புகழ்வது,  தமிழரின் ஒட்டு மொத்த வாழ்வியலும் தமிழோடுதான் என்று உரைபோரை எங்ஙனம் வியப்பது,  தமிழர் தமிழ் ஆய்வினை உற்று நோக்கி,மேற்கோளிட்டு தமிழின் ஈர்ப்பினை நோக்கி எனையும் எனை போன்றோரையும் உந்திதள்ளிய ஐயனே உமக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

பெருவுடையான்


ஞாயிறு, 12 மே, 2013

அன்னை


உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்து
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்து கொஞ்சும் தாய்க்கு ஈமச்சடங்கினில் அவள் சிறப்பினை நெஞ்சுருகி பாடிய பட்டினத்தடிகளின் பாடலை நினைவு கூர்தல் இவ்வன்னையர் தினத்தில் சிறப்பினை நல்குமென நினைக்கிறேன்

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்று

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டி

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்க்கு பட்டினத்தடிகளின்  இவ்வரிகள் அன்னையர்களுக்கான சிறப்பமைவு சமர்ப்பனமெனவே நான் கருதுகிறேன்.

அது போல் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்  என்ற வாசகத்திற்கிணங்க,  திருவாசகத்தில் போற்றி திருவகவலில், மானிட பிறப்பு எவ்விடத்தெல்லாம் பிழைத்து வருதலை நோக்குங்கால், அதில் அன்னையின் சிறப்பும் மறைந்திருப்பதை காணலாம்.

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

எனப் பாடபட்டுள்ள இப்பாடலில் கருவோடு படும் துன்பம், பிள்ளையோடு படும் துன்பம் என அன்னை படும் இன்னலை மறைமுகமாக இருப்பதை நான் உணர்கிறேன். என்றுமே அன்னை என்பவள் பிறருக்கு தெரியாமல் மறைமுகமாகவே இன்னல் அனுபவிப்பவள் தானே ...... தாய்மைக்கும் எனது அன்னைக்கும் அன்பான வணக்கங்களோடு தலை வணங்குகிறேன்

இவன்

பெருவுடையான்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஆசிரியர் நகைச்சுவை

ஆசிரியர் : சனி ஞாயறு திங்க லீவு

மாணவர்கள் : ஹையா ஜாலி ஜாலி

ஆசிரியர் : எப்பா ராசாக்களா சனி ஞாயறு திங்க திங்க லீவு(சாப்டலீவு)

மாண்வர்கள் : ஞே..பவ்வ்வ்

*************************************************************************************************

ஆசிரியர் : 23ம் நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி காது இருக்காது

மாணவர்கள் : அப்டியா..! ஏன் சார்..?

ஆசிரியர் : கண்ணுகளா 23ம் நூற்றாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி காது இரு(இரண்டு) காது 

மாணவர்கள் : ஞே.....பவ்வ்வ்


இறைவன் உதயமாகிறான்


கலைக்கண் கொண்டு சிலையொன்று
எம்முன்னோன் செதுக்கினரோ

வழிவந்தோரெலாம் அக்கலை கண்டு வியந்து
கைகூப்பி தொழுதனரோ

கலைதனை தொழிலாய் கொண்டு
தொழிற்தனில் கடவுளை கண்டனரோ
எம்மக்காள் அம்முதல் இறைதனை ஏற்றனரோ

அண்ட வெளியில் காணாத இறையை
அன்பினில் அடைத்தனரோ
இயற்கையில் காணாத இறையின் வனப்பை
சிலையின் அழகில் புகுத்தினரோ

அவ்வழி இல்லையெனில்

விஞ்ஞான மெய்ஞான வியாக்யான
மெலாம் பேசி எம்மக்காள் 
இறைதனை கண்டனரோ

சாதிசமய தீண்டாமைதனை
இரவல் பெற்ற அறிவைகொண்டு
எம்குல மக்காள் எங்ஙன்ம் வகுத்தனரோ
இதில் எங்ஙகனம் இறைதனை படைத்தனரோ

பெருவுடையான்

என் தேசம் என் மக்கள்


சாதீ ஒழிய பாடுபடும் பலர்,
சமய ஒழிப்பில் சிலர் ஆகி போகிறார்கள்.

இவ்விரண்டும் தேவையென்று சொல்லும் சிலரின் கருத்தடைவு யாதெனில், அவரவர் இனம் யாதென அறியவே இவையாம்.

பாவம், இரவல் வாங்கிய அறிவை கொண்டு சிந்திப்பவர்கள் போல
தமிழர் பண்டிகை எல்லாம் இந்துக்கள் பண்டிகை எனவும்,
இந்திய தேசம் இந்துக்கள் தேசம் எனவும் எண்னுவோர்க்கு என்ன சொல்லி புரிய வைப்பது.

மனிதரின் புறவாழ்வில் சாதீயும், அகவாழ்வில் மதமும் அகலா இடம் பிடித்து விட்டது. அறமும் வீரமும், ஊடலும் கூடலும், காதலும் களிப்பும் ,இருந்த மனித வாழ்வில் சாதி கம்பளம் விரிக்கபட்டு மதங்கள் வீருநடை போட்டு கொண்டுதான் இருக்கிறது. இதில் எம் தமிழினம் காலந்தோரும் ஒன்றுபடாமல் பிரிக்கபட்டே கிடக்கிறது

தமிழ்...
சைவத்தமிழ்
வைணவதமிழ்
சமணத்தமிழ்
என சமயங்களால் வளர்க்கபட்டது போல் இனிவருங்காலம் சாதிகளால் வளர்க்கபட்டு விடுமோ

இத்தருணம் நாம் காணும் தமிழ், சமயங்களால் வளர்க்கபட்டு அழிவின் விளிம்பில் மிஞ்சியவைகளே

மிஞ்சியவை சாதிகளால் வளர்க்க பட்டால் இனியும் எஞ்சுவது கடினமே, எனும் ஐயப்பாடே என்னில்  நிலவுகிறது

இன்றய சூழலில் தமிழ் பேசுபவன் யாரென்றால், முதலிடம் பிடிப்பவர்கள் அரசியல் கட்சி தலைவர்களே, பிறமொழி கலப்பில்லாமல் பேசினாலே அவனை அரசியல் கட்சிகாரனாகவே பார்க்கிறது சமூகம் ,என்னை பொறுத்தவரையில்

சமூகம் வளர அரசியல்ஆட்சி நடத்தியது போய், சாதிசமய வளர்ச்சியில் ஒண்டிகுடித்தனம் நடத்துகின்றன ஆட்சிகளும் & கட்சிகளும்

சமூக வளர்சியில் பூர்வகுடி இனவளர்ச்சியை மேம்படுத்தாத அரசுகள்,  கடைநிலை குடிமகனின் தேவையை சீர்குலைக்கும் சாதி சமயத்தை சீர்படுத்தாத அரசுகள், கண்டம் விட்டு கண்டம் கொள்ளையடித்தது போதாதென்று, கோள்விட்டு கோள் சென்று கனிம வளங்களை கொள்ளையடிக்க தயாராகி வருகிறது . இது தான் இன்றைய நிலையில் எம் தேசத்துக்கான வளர்ச்சி

சாதியம் ஒழிக்க பாடுபட்டவர்களின் பெயர் கூட இன்று சாதி பட்டியலில் ,இனம் காக்க பாடு பட்டவர்களின் பலரது பெயர் இனபட்டியலில் கிடைப்பது அரிதே

சமணர்களுக்கு பிடிக்காத ஐந்திரம் எனும் இலக்கண நூல் பாணினியால் அழிக்க பட்டது போல் சாதிசமயங்களால் தமிழும் ,எம் இனமும் அழியபடாமல் இருந்தால் சரி

(ஐந்திரம் வழியாக அகத்தியத்தின் துணையோடு தொல்காப்பியர் நூலியற்றியதாக தொல்காப்பியரின் சக மாணவரான பனம்பாரர் கூறுகிறார்)

பெருவுடையான்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கிராமியம் - தாலாட்டு


நெடுநாட்களுக்கு பின் கிராமியங்களில் பாடப்படும் தாலாட்டு பாடல்களோடு இப்பதிவு வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி , பொதுவாக தாலாட்டுகளில் ஆராரோ,ஆரிரரோ,என்று இசை வரிகளை பயன்படுத்தபட்டே பாடபட்டிருக்கும். எல்லாம்... குழந்தைகளை வசீகரிக்க கூடிய ஒரு ஈர்ப்பு தான் அவ்வரிகள். அதே போல ஆண் குழந்தைகளுக்கு தனி, பெண் குழந்தைகளுக்கு தனி, என சில சில மாற்றங்கள் செய்து பாடபட்டிருக்கும், ஆண்,பெண் என இருவருக்கும் பொதுவான பாடல் வரிகளும் இருக்கும். 

உதாரணம் :

ராராரோ... ஆரிரரோ
ஆராரோ... ராரிரரோ
என் கண்ணே
ஆரிரரோ ராராரோ...
கண்ணுங்கு... கண்ணுறங்கு...
கண்மணியே... கண்ணுறங்கு... - என்
பொன்மணியே கண்ணுங்கு...

ராராரோ... ஆரிரரோ
கண்ணே ஆரிரரோ ராராரோ...

ஓடு மான் ஓட
ஒன்பது மான் பின் தொடர
காட்டு மான் கூட
கவரிமான் கண்ணுறங்கு
கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னான கண்ணே
பூமரத்து வண்டுறங்கு

ராரிக்கு அழுத கண்ணோ
நீ ராமர் புஷ்பம் கேட்ட கண்ணோ
தூரிக்கு அழுத கண்ணோ
நீ சொக்க ரதம் கேட்ட கண்ணோ
ஓ ராரி ராரி ராரி ராராரோ             (பொது)
**********************************************************
சரி, ஆணுக்கு தனி பெண்ணுக்கு தனி தாலாட்டு பாடல்கள் என்று சொன்னேன் அல்லவா ,அந்த ஆண் பிள்ளைகளுக்கான தாலாட்டு வரிகள் எப்படி இருக்கும், கொஞ்சம் வீரம் கலந்ததாக இருக்கும் அவ்வளவே இதோ கீழே

உதாரணம் :

பூனை பால் பீச்சி
புலிப்பால் உறையூத்தி
ஆனைப்பால் பீச்சி வரும்
ஆனழகன யாரடிச்சா

தெற்கே உறகிணறாம் - உன்
தெருவெல்லாம் பால்கிணறாம்
பால்கிணத்த பாக்க வந்த
பாலகன யாரடிச்சா

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

மாமா அடிச்சாகளோ உன்னை
மல்லிகப்பூ செண்டால
அத்தை அடிச்சாகளோ உன்னை
அரளிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாகளோ உன்னை
தாழம்பூ செண்டாலே
பாட்டி அடிச்சாகளோ உனக்கு
பால் கொடுக்கும் கையாலே

யாரடிச்சா நீ அழுக
நீ அடிச்சாரை சொல்லி அழு

ஓ ராரி ராரி ராரி ராராரோ         (ஆண்)
*********************************************************
அடுத்து பெண் பிள்ளைகளுக்கான தாலாட்டு , இது கொஞ்சம் செல்லமாகவும் குல பெருமைகளை தழைக்க செய்ய கூடியதாகவும் இருக்கும் இதோ

உதாரணம் :

வடக்கே நிலம் வாங்கி உங்க அப்பா
வாழை தோப்பு உண்டு பண்ண
வாடகாத்து வீசுதல்லோ
வருசமக நீ கண்ணசர

தெற்கே நிலம் வாங்கி உங்க அப்பா
தென்னந்தோப்பு உண்டு பண்ண
தெங்காத்து வீசுதல்லோ
செல்லமகள் நீ கண்ணசர

நீ போற இடம்
என்ன வச்சா தோப்பாகும்
இஞ்சி பிஞ்சரங்கம்
எலுமிச்சை தோப்பாகும்
மஞ்ச பயிராகும்
மாமரம் சோலையாகும்

மானே மரிக்கொழுந்தே
மருகில்லா மாணிக்கமே
தேனே திரவியமே
தெவிட்டாத தெள்ளமுதே
மாசி பிறையே
மங்காத மாங்கனியே
தேசப் பிறையே
தெவிட்டாத மாங்கனியே
உங்க குலம் மங்காம
எதிர் குலத்தார் ஏசாம
தங்கமலை பொக்கிசத்தை
தானாள வந்த கண்ணே

கண்ணுரங்கு கண்ணுரங்கு
கண்மணியே கண்ணுரங்கு - என்
பொன்மணியே கண்ணுரங்கு       (பெண்)

தாலாட்டினை உங்கள் இல்லங்களிலும் சிறிது பயன்படுத்தி தான் பாருங்களேன் . உங்களுக்கு தெரிந்த நாட்டுபுற கிராமிய தாலாட்டு வகைகள் ஏதேனும் இருந்தாலும் கூறுங்களேன் 

நன்றி
பெருவுடையான்